2012 குருபெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசி,
அஸ்வினி, பரணி ( கிருத்திகை 1 ம் பாதம் )
கடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் பகை பலத்துடன் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தனத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். எனினும் 12 ம் இடத்திற்கு அதிபதி குரு தன ஸ்தனத்தில் அமர்வதால் சுப செலவுகள் அதிகரிக்ககூடும். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அனாவசியமான செலவினங்களைத் தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அதிகம் குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்தி கூர்மை வெளிபடும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிபடும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக அமையும். நீங்கள் கூறும் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் மற்றவர்கள் சிந்திக்க வைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை சதா இருந்து வரும்.
நுட்பமான அறிவுத்திறன் வளர்வதால் மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைந்து வரும். குரு பார்வை ஆறாம் இடத்தின் மீது விழுவதால் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உடல் நிலை சீராக இருந்து வரும். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் தங்கள் உடல் நிலையை கவனத்தில் கொள்வது நல்லது. கடன் பிரச்சனைகள் குறைந்து நிம்மதி காண்பீர்கள். உங்கள் ஜென்ம ராசியில் இருந்து குரு விலகியிருப்பதால் கண்டச்சனியின் ஆதிக்கத்திற்குள் இருந்து வரும் உங்களுக்கு சனியினால் உண்டாகும் சிரமங்கள் சற்று அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும், அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும். நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் எல்லோறுடனும் மிகுந்த கவனத்துடன் பழகி வர வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்கள் இயங்கும்போது நிதானம் தேவை.
பூர்வீக சொத்துக்களின் மூலம் நல்ல ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்து வரும் சிவில் சம்பந்தமான வழக்குகளில் விரைவில் தீர்வு கிடைக்கக் காண்பீர்கள். பெற்றோர் மற்றும் குடும்ப பெரியோரின் ஆதரவு இருந்து வரும். பல வருடங்களாக விட்டுப்போயிருந்த தகப்பனார் வழி உறவு ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் வாழ்வியல் நிலை ஸ்திரத்தன்மை அடையும். ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு காண்பீர்கள். சாதுக்கள், சன்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும். நெடு நாட்களாக சேஷத்ராடனம், தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மிகப்பயணம் செல்லக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும்.
10ம் இடமாகிய ஜீவன ஸ்தனத்தின் மீது விலும் குரு பகவானின் சிறப்புப் பார்வை உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்தும். உத்யோக ரீதியக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். அரசுபணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். உத்யோக முறையில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் உத்யோகம் ஓரிடத்தில் நிலைபெறப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் தொழிலாளிகள் சார்ந்த பிரச்சனைகளை மிகுந்த லாவகத்தோடு கையாண்டு நற்பெயர் காண்பீர்கள்.
சுய தொழில் செய்வோர் சீரான தனலாபத்தினை அடைந்து வருவார்கள். அதே நேரத்தில் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு கணக்கு வழக்குகளை கையாள வேண்டியது அவசியம். எலக்ற்றிகல், எலக்ற்றானிக்ஸ், ஹார்டுவேர், மெக்கானிகல் மற்றும் தொழிற்சாலை சார்ந்த பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு உத்யோக ரீதியாக முன்னேற்றத்தை அடைவார்கள். மருத்துவம், கெமிகல்ஸ், திரவப்பொருட்கள் மற்றும் கலத்துறையைச் சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
உங்கள் ராசிக்கு 9,12க்குரிய குரு பகவான் இரண்டாம் இடத்தில் அமர்வதால் சுப நிகழ்ச்சிகள். ஆன்மிகப் பணிகள் ஆகியவற்ரிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆயினும் ஏதேனும் ஒரு வழியில் பொருள் வரவு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும். மொத்தத்தில் செலவினங்களுக்குத் தகுந்தாற்போல் வரவு நிலையும் அதிகரிப்பதால் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தருகின்ற வகையிலேயே அமைந்துள்ளது.
பரிகாரம்
ஞான தஸ்சனாமூர்த்தியை வழிபட்டு வருதல் நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடி திருத்தலத்திற்குச் சென்று குரு பகவானாக தரிசனம் தரும் தஸ்சனாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மை உண்டாகும்.