‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற வாக்கியத்துக்கு ஏற்ப, நமது முன்னோர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று கடந்த காலங்களில் குடியேறி விட்டனர். சொந்த ஊருக்கு வர வாய்ப்பில்லாமலேயே அநேக குடும்பங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விட்டனர். தலைமுறை இடைவெளி வந்துவிட்ட காரணத்தாலும், முன்னோர்கள் தங்களது குலதெய்வம் எதுவென்று தங்கள் வாரிகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தாலும் பெரும்பகுதியினர் தங்களுக்குரிய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்.
நம்முடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். இதே வீடு பொதுவாக புத்திர பாக்கியம் நமது தூய்மையான எண்ணங்கள், புத்தி சாதுர்யம், வித்தை, கல்வியில் திறமை, சத்சங்கம், மகான்களின் நட்பு, யோகங்கள், பதவி, உயர்வு,அந்தஸ்து முதலிய விஷயங்களையும் அறிய உதவும். குலதெய்வம் அறியாதவர்கள் லக்னத்துக்கு 5ஆம் வீட்டிற்குரிய கிரகம் எங்கு வருகின்றது என்பதைப் பார்த்து, அதனைக் கொண்டு தங்கள் குலதெய்வத்தை அறியலாம். நல்ல ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காட்டி, 5ஆம் வீட்டின் வாயிலாக குலதெய்வத்தை அறியலாம். ‘எங்களுக்கு ஜாதகம் இல்லை. எதனை வைத்து நாங்கள் குலதெய்வத்தை அறிவது?’ என்று கேட்போரும் உண்டு. அவர்களும் தங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்ள வழியுண்டு. அதிகமாக காசு பணம் செலவு செய்து குலதெய்வத்தை அறிய வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தவில்லை.
நமது முன்னோர்கள் முற்காலத்தில் தெய்வத்துடன் பேசினர் என்றும்: அப்படிப்பட்ட வேளையில் மற்றவர்கள் பார்த்தால் அவர்கள் கல்லாகி விட்டனர் என்பதையும் பழைய வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அங்காள பரமேஸ்வரி தெய்வம் இருக்கும் தம்மாயி அம்மன் என்ற ஒன்றும் இருக்கும். இந்த தம்மாயி அம்மன்தான் நமது முன்னோர் சோனையா என்ற ஆண் தெய்வம் இருக்கும் இடத்தில் நமது முன்னோர்களில் பாட்டையா என்பவர் அங்கு தெய்வமாக இருப்பார். தற்போது குலதெய்வம் தெரியாதவர்கள் கோடங்கி அடித்தோ மை போட்டுப் பார்த்தோ குலதெய்வத்தை அறிய வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே கீழ்க் கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து உங்கள் குல தெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள்.
பரிகார முறை
குலதெய்வத்தை அறியாதவர்கள் உங்கள் பகுதியில் இருக்கும் எல்லா தெய்வங்களின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி ஒரு டப்பாவில் போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும். மாசி மாதம் 1ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் காலை, மாலை இரண்டு வேளையும் விரதமிருந்து பூஜை செய்து வரவேண்டும். 7ஆவது நாள் மாலையில் தெய்வச் சீட்டுகளை ஒரு இடத்தில் கொட்டி மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்து ஒரு சீட்டை எடுக்கச் செய்யுங்கள். அதில் வரும் தெய்வம் உங்கள் குலதெய்வம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அந்த தெய்வத்திற்கு உங்கள் வழிபாடுகளைச் செய்து வாழ்க்கைத் தடையைக் கடந்து முன்னேறலாம்.
எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர நன்மையுண்டு.
ஒரு குடும்பத்தில் ஏக நட்சத்திரம் உள்ளவர்கள் இருந்தால் தோஷமா?
என்னிடத்தில் ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களும் ‘பால ஜோதிடம்’ வாசகர்களும் எழுப்பும் கேள்வி-‘எங்கள் வீட்டில் ஒரே நட்சத்திரத்தில் பிள்ளைகள் உள்ளனர். அதற்கு என்ன பரிகாரம்?’ என்பது ஏக நட்சத்திரம் என்பது குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கோ,தாய்-தந்தயருக்கோ பிரச்சினை எதையும் தராது என்பதை நாம் அறிய வேண்டும். ஏக நட்சத்திரம் என்பது திருமணப் பொருத்தத்தில் மட்டுமே பிரச்சினையைக் கொண்டு வரும். அதிலும் கீழ்க்கண்ட எட்டு நட்சத்திரங்கள் பிரச்சினையைத் தராது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ரோகிணி திருவாதிரை மகம் விசாகம் திருவோணம்,அஸ்தம்,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக வந்தால் அதாவது இருவர் பிறந்ததும் ஒரே நட்சத்திரமானால் நன்கு பொருந்தும்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அசுவதி, கார்த்திகை பூராடம், உத்திராடம், மிருகசீரிடம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம்.
பரணி,ஆயில்யம்,சுவாதி,கேட்டை,மூலம், அவிட்டம், பூரட்டாதி ஆகியவை ஏக நட்சத்திரமானால் விலக்க வேண்டும்.
ஏக நட்சத்திரம் என்பது நமது குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பிரச்சினையைத் தராது. ஏக நட்சத்திர விதிவிலக்குக்கு அப்பாற்பட்ட தம்பதியருக்கு மட்டும் சிரமத்தைத் தரும் என்பதை வாசகர்கள் அறிந்து கொள்வதோடு பயம் தணிய சில பரிகாரங்களையும் செய்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
பரிகாரம்-1
ஏக நட்சத்திரத்தில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் உங்களது குடும்பத்தில் தாய்-தந்தையருக்கோ, பிறந்த பிள்ளைகளுக்கோ கண்டம் வரும் என்று பயப்படக்கூடாது. ஏக நட்சத்திரத்தில் பிறந்துவிட்ட பிள்ளைகளை மாதம் ஒருமுறை செவ்வாய்க்கிழமை அன்று, அரசும், வேம்பும் இணைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று சூடம் ஏற்றி மரத்தை வழிபட்டு வந்தால் தாக்கம் எதுவும் வராது. அரச மரமும் வேப்ப மரமும் இணைந்த வண்ணம் உங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் இருக்கும். அதில் செய்யும் வழிபாடு ஏக நட்சத்திர தாக்கத்தைக் குறைக்கும். மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை வீதம் 12 மாதங்கள் வழிபட வேண்டும்.
பரிகாரம்-2
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்களும், உறவு கெடக்கூடாது என்பதற்காகத் திருமணம் செய்து கொண்ட ஏக நட்சத்திர தம்பதியர்களும் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமையைத் தேர்வு செய்து, அரசும், வேம்பும் சேர்ந்துள்ள மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி வணங்கி வர வேண்டும். தொடர்ந்து 12 மாதங்கள் வணங்கிட,தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். ஏக நட்சத்திரத்தால் தாக்கம் வராது.